About Us
இந்தியாவில் எல்லா இடத்திலும் கொள்ளை நடக்கிறது. குறிப்பாக கல்வி கொள்ளை தாங்க முடியாத அளவில் உள்ளது. உரிய அனுமதி இன்றி உரிய வசதி இன்றி கல்வி நிறுவனங்களை நடத்தி ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறார்கள். 1000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட வள்ளியம்மாள் டிரஸ்டின் தற்போதைய சொத்து மதிப்பு 25 லட்சம் கோடி. கற்பனை செய்து பாருங்கள். 18 வருடத்தில் இது சாத்தியம். இவ்வளவும் ஏழைகளின் ரத்தம் அல்லவா?
இது ஒரு உதாரணம் தான். இது போல் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கல்வி கொள்ளைக்கு அளவே இல்லை. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு ஆளாக்க வேண்டும் என நினைப்பதை மட்டும் மூலதனமாக வைத்து மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதித்துறையில் உள்ளவர்கள் என அனைத்து மட்டத்தில் உள்ளவர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிந்தோ, தெரியாமலோ உதவி வருகிறார்கள். அரசு நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக குடியரசு தலைவர், பிரதமர் முதல் சாதாரண மாவட்ட ஆட்சி தலைவர் வரை பல்வேறு தரப்பினரையும் அழைத்து விழா நடத்தி மற்றும் மீடியாக்களையும் கைக்குள் வைத்து மக்கள் இதைப்பற்றி பேசுவதற்கே அஞ்சும் நிலையை உருவாக்கி உள்ளார்கள்.
சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் ஒரு அதிர்ச்சி செய்தியை சொன்னார். பல லட்சங்கள் செலவு செய்து ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று படிக்க சேர்ந்து அவர்களது கொள்ளை தாங்காமல் 2, 3-வது வருடங்களை படிக்க பணம் செலுத்த முடியாமல்; கல்லூரியை விட்டு வெளியே வந்ததாகவும் அந்த துயரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் வீட்டை விட்டே ஓடி விட்டார் என்றும் அந்த துக்கத்தில் முதல் வருடம் பணம் கட்ட தாலியை விற்று பணம் செலுத்திய தாய் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார். இதே போன்ற நிலை இன்னொரு தமிழ் நாட்டில் உள்ள தாய்க்கு வரக் கூடாது. எனவே நாம் ஒவ்வொருவரும் இதில் தனி கவனம் செலுத்தி இந்த கல்வி கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் தைரியமாக கல்வி கொள்ளை பற்றி முகநூலில் எழுதினார். அந்த விபரங்களை வைத்து 15 இளைஞர்கள் சேர்ந்து இந்த அமைப்பை உருவாக்கினோம். இதற்கு யாரிடமும் நன்கொடை பெறுவது கிடையாது. உறுப்பினர்களாக உள்ளவர்களே செலவு செய்து கொள்ள வேண்டும். யாரேனும் செலவு செய்ய விருப்பப் பட்டால் தொடர்புடைய பணியை அவரிடம் கொடுக்க வேண்டும் என்று மட்டும் முடிவு செய்து ஆரம்பிக்கப் பட்ட இந்த இயக்கத்தில் ஒரு மாதத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து உள்ளார்கள். எனவே மேலும் இளைஞர்களை சேர்க்க இதே பெயரில் ஒரு முகநூல் கணக்கு தொடங்குவது என்றும் முடிவு செய்துள்ளோம். இந்த சமுதாய புரட்சியில் கலந்து கொள்ள தைரியமும் துணிவும் உள்ள இளைஞர்கள், இளைஞிகள் சமூக ஆர்வலர்கள், பெரியவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், கல்வி கொள்ளையில் பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் தகவல்களை எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் இதன் தொடர்ச்சியாக தொடர் நடவடிக்கைகள் எடுப்போம்.
எங்களது இணைய தளத்தில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உதவுவதற்கான தகவல்களையும் சேகரித்து வெளியிட உள்ளோம். இம்மாதிரி தகவல் இருந்தால் அதனையும் அனுப்பி தரலாம்.
எங்களது மின் அஞ்சல் முகவரி : pmaedtn@gmail.com